கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்துக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
- Advertisement -
குறித்த பணத் தொகையை நீதிமன்றில் கையளிக்கும்போது கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.
- Advertisement -
இந் நிலையில் குறித்த பணத் தொகை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்கு மூலம் பெற வேண்டி இருக்கும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கடந்த ஜூலை 9 ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம், ஜூலை 29 வரை நீதிமன்றில் ஒப்படைக்கப்படாமை பாரிய சந்தேகத்துக்கு உரியது என சுட்டிக்காட்டினார்.
இந்த பணம் தொடர்பில் விசாரணை வேண்டும். அது எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை வேண்டும். முழுமையான விசாரணைகளையே நாம் எதிர்ப்பார்க்கிறோம் என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, முறையான, விரைவான விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மத்தி வலய குற்ற விசாரணை பணியகத்துக்கு உத்தரவிட்டதுடன், இப்பணத்தை நீதிமன்றில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திய கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு எதிராக சிறப்பு விசாரணை ஒன்றினை நடாத்துமாறு எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
அதற்கான தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.