கண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்யை பெறுவதற்காக காத்திருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு எவ்வித உடல் நிலை பாதிப்புகளும் காணப்படவில்லை என உயிரிழந்தவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
“என் அண்ணனுக்கு எந்த நோயும் இல்லை. இந்த அரசாங்கத்தின் தவறினால் எனது சகோதரர் இறந்தார் என்று கூற நான் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் ஊரில் மண்ணெண்ணெய், எரிவாயு பெற்றுக் கொள்வதற்கு இடமில்லை. இன்று எங்காவது மண்ணெண்ணெய் கிடைத்துவிடும் என கூறியே அண்ணன் காலையில் சென்றார்.
- Advertisement -
கடைசியில் எங்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை அண்ணனின் உடல்தான் கிடைத்தது. அவர் யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்த நல்ல மனிதர். அவரது மனைவி சமைப்பதற்கு சிரமப்பட்டு வந்ததை பார்த்து தம்பி கடந்த நாட்களாக கவலையாகவே இருந்தார். இறுதியாக நாங்கள் எங்கள் சகோதரனை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மொஹமட் இல்லியாஸ் என்பவரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, பெருநாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் மழையில் நனைந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த போது, மயங்கிய நிலையில் கீழே விழுந்தார் என பொலிஸ் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த மொஹமட் இல்லியாஸ் என்பவர் சுமார் 30 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றியவர் எனவும், இலங்கை பொலிஸ்துறையில் அரச உத்தியோகத்தராக இருந்தவர் எனவும் அவரது சகோதரர் மொஹமட் நிசாம் தெரிவித்துள்ளார்.
உடத்தலவின்ன பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அடுப்பு பற்றவைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, காலை 11.30 மணியளவில் இளைய சகோதரர் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.
மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்றிருந்த போது மயங்கி விழுந்த சகோதரரை வைத்தியசாலையில் அனுமதிக்க நீண்ட நேரமாகிவிட்டதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் நிசாம் தெரிவித்துள்ளார்.