சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் எட்டு மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. சீனாவின் Qingdao Seawin Biotech Group நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
- Advertisement -
தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமராச்சியிடம் இவ்வாறு எட்டு மில்லியன் டொலர் நட்டஈடு கோரப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் நட்டஈட்டுத் தொகையை வழங்க வேண்டுமென கோரியுள்ளது. நட்ட ஈட்டுத் தொகையை வழங்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
- Advertisement -
சட்டத்தரணி எம்.ஜே.எஸ் பொன்சேகாவின் ஊடாக இந்த நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் கவனயீனம் காரணமாக தமக்கு எட்டு மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஐம்பது நாடுகளுக்கு தமது உர உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தினால் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான ஓர் நிபந்தனைக் கடிதம் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என மேலதிக பணிப்பாளர் விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.