வடக்கு கிழக்கில், இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றபோது பௌத்த சின்னங்களை அவதானிக்க முடிவதாக தொல்லியல் திணைக்களத்தின் பொது முகாமையாளர் அனுர மனதுங்க (Anura Manathunka) கூறியுள்ளார்.
- Advertisement -
கிளிநொச்சி – பூநகரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, இங்குள்ள தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
- Advertisement -
“புராதான சின்னங்கள் தொடர்பாக பாதுகாக்கவும் அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குமே எமது திணைக்களம் இருக்கின்றது. எவ்வாறான இடங்களில் புராதன சின்னங்கள் உள்ளன என்பதை அந்தந்த இடங்களிற்கும் சமயங்களிற்கும் இடையிலான தொல்லியல்கள் தொடர்பிலேயே ஆராயப்படும். ஆனால் இங்கு ஒரு சிக்கல் நிலை ஏற்படுகின்றது.
இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றபோது பௌத்த சின்னங்களை அங்கு அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான இடங்களில் புதிதாக விடயங்களை திணிப்பதாக தவறான நிலைப்பாடு ஒன்று உள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமானது அனைத்து சமயங்களிற்கும் மதிப்பளித்து செயற்படும் திணைக்களமாகும். பொதுமக்கள் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பாக தமக்கு அறியத்தந்தால், அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து சீர் செய்வதற்கு முடியும்.
நாங்கள் அனைத்து மதங்களையும் மதித்து அந்தந்த சமய தொல்பொருள் சின்னங்களை ஆராய்ந்து பொது மக்களிற்காகவே சேவை செய்கின்றோம்” என்றார்.