முஸ்லிம் மாணவிகளின் கலாசாரம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான மாசல் விஜேந்திரன் தம்மை தனது அலுவலகத்துக்கு அழைத்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
- Advertisement -
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழக புகுமுக இரு முஸ்லிம் மாணவிகளை அதே, பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கலந்துரையாடியுள்ளனர்.
- Advertisement -
அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது “ராக்கிங்” செய்ததாக விரிவுரையாளர் ஒருவரால் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பாக இருக்கிற விஜேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளை அழைத்த விஜேந்திரன் ராக்கிங் செய்கிறீர்களா என அதட்டியதுடன், தமது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து பரிமாறியதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
தாம் ராக்கிங்கில் ஈடுபடவில்லை எனவும், தமது ஊரைச் சேர்ந்த மாணவிகள் என்றபடியால் அவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதாகவும் பல்கலைக்கழகத்துக்கு வரும்போது எவ்வாறு தமது மத நம்பிக்கை கடைப்பிடிக்க வேண்டும் என அவர்களுடன் பேசியதாகவும் மாணவர் ஒன்றியத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாது தமது பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தாமல் அச்சுறுத்தும் வகையில் ஒழுக்காற்று அதிகாரி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தாம் ராக்கிங்கில் ஈடுபடவில்லை என பலமுறை தெரிவித்தும், இறுதியாக எழுத்து மூலமாக தருமாறு பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ள போட்டோ கொப்பி இயந்திரத்தின் மூலம் பிரதி பெற்று வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மாணவிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.