சீனாவின் ஆதிக்கம் காரணமாகவே ஆளில்லா விமானங்களை அனுப்பி ஸ்ரீலங்காவை கண்காணிப்பு செய்வதற்கு இந்தியா முயற்சி செய்துவருகிறது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
- Advertisement -
அமெரிக்கப்படை வந்திறங்கும் என்ற அச்சத்தில் அன்று எம்.சி.சி ஒப்பந்தத்தை எதிர்த்த தரப்பினரே இன்று ஸ்ரீலங்காவிற்குள் சீனப்படையினர் வர அனுமதித்திருப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிடுகின்றது.
- Advertisement -
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம பிரதேசத்தில் குளமொன்றை சுத்திகரிப்பு செய்ய அண்மையில் விஜயம் செய்த சீன இராணுவத்திற்கு சொந்தமான சீருடையை ஒத்த ஆடையை அணிந்துவந்த சீனப்பிரஜைகள் குறித்த தகவல் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கருத்து வெளியிடப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.வி. அலவத்துவல,
குளச்சுத்திகரிப்பிற்கு ஈடுபடுத்தப்பட்ட சீனப்பிரஜைகள், அந்நாட்டுப் படையினர் அணிந்திருந்த சீருடைக்கு சமமான சீருடையில் காட்சியளித்திருக்கின்றனர்.
அன்று எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்கப்படை வந்திறங்கும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்த தரப்பினரே இன்று சீனாவுக்கு காட்டிக்கொடுக்க முயற்சித்திருக்கின்றனர்.
குளமொன்றை சுத்திகரிப்பு செய்கின்ற இந்தப் பணியை உள்நாட்டவர்களே செய்வார்கள். அதனைக்கூட சீனாவுக்கு வழங்கியதன் ஊடாக தேசியப்பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
விசேடமாக இந்தியா அமெரிக்காவிடமிருந்து கண்காணிப்பு செய்வதற்கான ஆளில்லா விமானங்களைப் பெற்றிருப்பதாக தற்போது கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்காவிற்குள் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக அமையும் என்ற காரணத்தினால்தான் இந்தியத்தரப்பு இந்த நடவடிக்கையை எடுக்கின்றது.
வரலாற்றில் எந்த நிலையிலும் இருந்திராத அளவுக்கு இன்று தேசியப்பாதுகாப்பு வீழ்ச்சியடைகின்றது. இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் போட்டிகளில் இன்று ஸ்ரீலங்கா சிக்கிவிட்டது என்றார்.