நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றன. குறிப்பாக எரிபொருள் பிரச்சினையானது கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீராத பிரச்சினையாக காணப்பட்டு வருகின்றது.
- Advertisement -
இவ்வாறான நிலையில் நாட்டில் போதியளவு அரிசி இருப்பதனால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இன்றையதினம் (01) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உர இறக்குமதியை நிறுத்தும் தீர்மானத்துடன் இந்த நாட்டில் அரிசி நெருக்கடி ஆரம்பமானது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உட்பட விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கரிம உரக் கொள்கையும் இலங்கையில் நெற்செய்கையை கடுமையாகப் பாதித்தது.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு இரசாயன உரங்களை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால், இன்று வரை அதற்கான வெற்றிகரமான நடவடிக்கையை அரசு எடுக்காததால், உரத்தை மிக அதிக கறுப்புச் சந்தை விலைக்கு விவசாயி வாங்க வேண்டியுள்ளது.
கடந்த நெல் பருவத்தில், நெல் அறுவடையும் வெகுவாகக் குறைந்ததால், சீனா, இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.