யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவர் தமது பெற்றோர் உட்டபட்ட நெருங்கிய உறவினர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனையை வீட்டிலேயே மேற்கொண்டதுடன், அவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்த தகவல் அம்பலமாகியுள்ளது.
- Advertisement -
குறித்த வைத்தியர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகர் பிரிவில் உள்ள சுற்றயல் மருத்துவமனை ஒன்றில் தற்காலிக இணைப்பில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
சுகாதார திணைக்களத்தினால் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களை அவசியம் ஏற்படின் பரிசோதிப்பதற்கு வழங்கிய அன்ரிஐன் பரிசோதனை கருவிகளை, குறித்த வைத்தியர் தமது வீட்டிற்கே எடுத்துச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டபோது வீட்டில் உள்ளவர்கள் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அது குறித்து எவருக்கும் அறிவிக்காது அவர்களை தமது வீட்டிலேயே வைத்திருந்ததுடன் வீட்டிற்கு ஒட்சிசன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் தாம் கடமைபுரியும் வைத்தியசாலையிலிருந்து கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வைத்தியர் குறித்து இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மாவட்ட சுகாதாரதுறையினரால் முன்வைக்கப்பட்டும் அவை எவற்றிற்கும் உரிய நடவடிக்கை மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரால் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
மேலும் குறித்த வைத்தியர் குறிப்பாக எல்லைக் கிராமம் ஒன்றில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அவர் கடமையாற்றியபோது உரிய அனுமதி பெறாது வெளிநாடு சென்றமை, தாம் கடமையில் இருக்காத (வெளிநாடு சென்ற, மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இரவுநேரக் கடமை செய்த) காலப்பகுதிக்கும் சேர்த்து மேலதிக வேலைக் கொடுப்பனவினைப் பெற்றமை, வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான துண்டுச் சிட்டைகளை தமது தனியார் சிகிச்சை நிலையத்தில் கட்டணம் பெற்று வழங்கியமை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.