“பாலியல் தொழிலை மோசமாகப் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இந்த வேலை எனக்கு வசதியாக உள்ளது. எனக்கு அதுதான் முக்கியம்,” என்கிறார் பாலியல் தொழிலாளியான ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
- Advertisement -
இந்தியாவில் பாலியல் வேலை செய்வது ஒரு குற்றமாக இல்லாவிட்டாலும்கூட, அதற்கான விடுதி நடத்துவது, நிர்வகிப்பது, பொது இடங்களில் வற்புறுத்துவது போன்ற சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதோடு தொடர்புடைய நடவடிக்கைகளால் பல பாலியல் தொழிலாளிகள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
- Advertisement -
பாலியல் தொழிலாளிகள் மீதான சமுதாயத்தின் அணுகுமுறை பெரும்பாலும் மோசமானதாகவே இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால், இதுவும் மற்ற வேலைகளைப் போலவே வாழ்வாதாரத்திற்கான ஒரு தொழிலே என்று கூறும் பாலியல் தொழிலாளியான ஆனந்தி, அந்த வேலையைச் செய்பவர்களும் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும் என்கிறார்.
ஒரு பாலியல் தொழிலாளியாக தான் மாறியது முதல் இதுதான் தனது வாழ்வாதாரம், அதை ஏற்றுக்கொள்வதில் எந்த அவமானமும் தனக்கு இல்லை என்ற திடத்தை அவர் பெற்றது வரையிலான தனது வாழ்க்கைக் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய வாழ்க்கை, இனி அவர் வார்த்தைகளில்…
நான் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவள். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே காதல் திருமணம் செய்துகொண்டேன். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இருவரின் குடும்பத்தினரும் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததால், எந்த உதவியுமின்றி தான் வாழ்ந்தோம்.
நாங்கள் மிகுந்த சிரமத்தில் இருந்தபோதும், அவர் மேற்கொண்டு என்னைப் படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பு முடித்தபோதே எனக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான். இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே, துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் உயிரிழக்கும்போது எனக்கு 19 வயது. அதற்குப் பிறகு பிஏ மற்றும் நர்சிங் படித்தேன்.
அதற்குப் பிறகு, குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு என்று பல தேவைகள் இருந்த காரணத்தால், கட்டட வேலை, மூக்குப்பொடி கம்பெனி, மென்பொருள் நிறுவனம், பருத்தி ஆலை என்று பல இடங்களில் பல வேலைகளைப் பார்த்தேன். இதற்கிடையில் நர்சிங்கும் படித்ததால், நர்சிங் வேலையும் பார்த்தேன்.
“உடலை பயன்படுத்திக் கொண்ட கந்துவட்டிக்காரர்” இவ்வளவும் செய்து பிள்ளைகளை வளர்க்கப் போராடிக் கொண்டிருந்தேன். என்னுடைய பெண் குழந்தை 10ஆம் வகுப்பு முடித்தபோது, அவளை மேற்கொண்டு படிக்க வைக்க வேறு பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்ததால், பள்ளியில் டிசி வாங்க முயன்றோம். அது அரசுப் பள்ளியாக இருந்தாலும், என்னிடம், “1500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் டிசி கொடுப்போம்” எனச் சொல்லிவிட்டார்கள்.
நான் காலில் கூட விழுந்து கெஞ்சினேன். ஆனால், அவர்கள் “பணம் கொடுத்தால்தான் டிசியை கொடுப்போம்” எனச் சொல்லிவிட்டார்கள். அப்போது பருத்தி ஆலையில் வேலை செய்துகொண்டிருந்ததால், எனக்கு சம்பளமே ஒரு நாளைக்கு 200 ரூபாய்தான்.
மகனுக்கு பிறந்ததில் இருந்தே நடக்க முடியாமல் இருந்ததால், அவனுக்கு மருத்துவச் செலவுகள் வேறு இருந்துகொண்டே இருக்கும். ஆகையால் என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை.
என்னுடைய மகள் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையோடு இருந்தாள். மகனும் அப்படி இருப்பதால், மகளையாவது அவள் ஆசைப்பட்டதைப் போல் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காக கந்துவட்டிக்கு ஒருவரிடம் கடன் வாங்கி என் பிள்ளையின் டிசியை வாங்கப் பணம் கொடுத்தேன். அதற்கு வட்டி மேல் வட்டி என்று கூடிக்கொண்டே போக, பணம் கொடுக்க முடியாமல் தவித்தேன். என் நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த கந்துவட்டிக்காரர், பணத்திற்குப் பதிலாக என் உடலை பயன்படுத்திக் கொண்டார்.
அதோடு நிற்கும் எனப் பார்த்தால், மகளின் படிப்புக்கு ஆகும் செலவு, மகனின் மருத்துவச் செலவு என்று அடுத்தடுத்து பணத் தேவை இருந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில் பணம் கேட்டு எனக்குத் தெரிந்த ஒரு அக்காவிடம் கேட்டேன்.
அப்போது அவர்தான், இந்தத் தொழில் பற்றியும் அதில் கிடைக்கும் வருமானம் பற்றியும் கூறினார். இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம், நம்முடைய வசதிக்கு ஏற்ப வேலை நேரத்தையும் நாட்களையும் அமைத்துக் கொள்ளலாம் என்று பாலியல் தொழில் பற்றிக் கூறினார்.
அவர் மூலமாகத்தான் நான் இந்தத் தொழிலுக்குள் வந்தேன். “மற்றவர்கள் பழிப்பார்கள் என்று நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?”
பாலியல் தொழிலுக்குள் வருவது குறித்துச் சிந்தித்தபோது, மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. இது நம் வீட்டிற்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள், பார்ப்பவர்கள் என்ன பேசுவார்கள் என்று மிகவும் சிந்தித்தேன். ஆனால், அப்போது ஒருவேளை சாப்பாட்டிற்கே நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்கூட யாருமே வந்து உதவி செய்யவில்லை. நான் பிறந்த குடும்பம்கூட ஆதரவாக வந்து நிற்கவில்லை.
கடன் கொடுத்தவன்கூட, என் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ளவே நினைத்தான். அப்படியிருக்கும்போது அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதை நினைத்தோ, நம்மைப் பழிப்பார்கள் என்றோ நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்றுதான் தோன்றியது.
அதற்குப் பிறகு நமக்காக, நமது குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம் எனத் துணிந்து இந்தத் தொழிலில் இறங்கினேன்.
இந்தத் தொழிலுக்குள் வந்து சில ஆண்டுகள் கழித்து இதே வேலையில் இருக்கும் மற்ற பல பெண்களுடனான நட்பு வட்டம் அதிகரித்தது. அவர்கள் எவ்வளவு சிரமங்களை, பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாகவும் அவர்கள் மூலமாகவும் உணர்ந்தேன்.
அதற்குப் பிறகுதான், அவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால் என்ன எனத் தோன்றியது. அவர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினேன். பாலியல் தொழிலாளிகளின் நலனுக்காகச் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்போடு சேர்ந்து பல்வேறு விஷயங்களைச் செய்தேன்.
குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில், பாலியல் தொழிலாளிகள் இடையே அந்த அமைப்போடு சேர்ந்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொடுப்பது, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது, மாத்திரை, மருந்து தேவைப்படும் நேரத்தில் வாங்கிக் கொடுப்பது என்று யாருக்கு என்ன தேவை ஏற்பட்டாலும், அந்த இடத்தில் சென்று நிற்பேன்.
அதன்மூலம், தங்களுடைய நலனுக்காக ஓர் அமைப்பு உள்ளது, அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற புரிதலை பாலியல் தொழிலாளிகள் இடையே கொண்டு சேர்க்க முயன்றேன். நான் வேலை செய்யும் மாவட்டத்திலும் எங்களைப் போன்றவர்களுக்காக ஒரு சங்கம் நடத்தி வருகிறேன்.
“சமூகத்தின் மோசமான நடத்தை” இயல்பாகவே நம் சமூகத்தில் ஒரு மோசமான நடத்தை உள்ளது. கணவரை இழந்த ஒரு பெண் தனியாக இருந்தாலே அவளைத் தவறாகத்தான் பார்ப்பார்கள். அவளுடைய சிரமங்களைப் பற்றியோ மனக் கவலைகளைப் பற்றியோ சிந்திக்காமல் தவறாகப் பார்ப்பார்கள்.
ஒத்த வயது இளைஞர்களிடம் பேசுவதோ, அவ்வளவு ஏன் வயதான ஆண்களிடம் பேசினாலும்கூட, நம் விருப்பத்திற்கு ஒரு பொருளை வாங்கினால்கூட, ஆசையாக விரும்பிய ஆடையை அணிந்துகொண்டாலும்கூட அதைத் தவறாகச் சித்தரிப்பார்கள்.
அப்படியிருக்கும்போது, கணவரை இழந்து தனியாக வாழும் ஒரு பெண்ணாக மட்டுமின்றி பாலியல் தொழிலாளியாகவும் இருக்கும் நான் எவ்வளவு வசைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டிருப்பேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
வாடகைக்குக் குடியிருக்கும் இடத்திலும்கூட, வீட்டு உரிமையாளர்கள் பாகுபாடு காட்டுவார்கள். ஆறு மாத காலம் இருந்தால், எந்த முன்னறிவிப்பும் இன்றி உடனே காலி செய்யச் சொல்வார்கள். பாலியல் தொழிலாளி எனச் சொன்னால் யாரும் வீடு கொடுக்கக்கூட மாட்டார்கள். வழக்கமாக 1000 ரூபாய் வாடகைக்கு விடும் வீடாக இருந்தாலும், எங்களுக்கு என்றால் 2000 ரூபாய் கேட்பார்கள்.
அதைக் கொடுத்துதான் ஆக வேண்டும். எங்களுக்கும் குடியிருக்க என்று வீடு வேண்டும் அல்லவா!
பிறகு அங்கிருந்தும் ஆறே மாதத்தில் துரத்திவிடுவார்கள். “இந்த வேலையைச் செய்வது என் விருப்பம்”
போலீஸ் தரப்பில் கைது செய்தால், அடிப்பது, கைபேசியைப் பிடுங்குவது, செய்தியில் முகத்தைக் காட்டுவது என்றெல்லாம் செய்வார்கள். அது அக்கம்பக்கத்தில் தேவையற்ற கவனத்தை ஈர்க்கிறது. தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது.
கடைக்கோ, கோவிலுக்கோ எங்கு சென்றாலும், இவர் பாலியல் தொழில் செய்பவர் என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்த வேலையை அவர்கள் செய்கிறார்கள் என்று யாரும் கடந்து போவதில்லை.
போலீஸ் கைது செய்தால், அதிலிருந்து வெளியே வருவதற்கும் செலவழிக்க வேண்டும். அதற்காக வாங்கும் கடனையும் வெளியே வந்த பிறகு தொழிலுக்குச் சென்றுதான் அடைக்க வேண்டும். கைதாகி பின்னர் வெளியே வந்தால், போலீசும் சில நாட்களுக்குக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
சரி கட்டட வேலை என்று வேறு எதையாவது செய்து கடனை அடைப்போம் என்று போனால், வேலை பார்ப்பது மட்டுமின்றி யார் எனத் தெரிந்திருப்பதால், அவர்கள் இஷ்டத்திற்கு இருந்தால்தான் சம்பளம் கொடுப்பேன் என வற்புறுத்துவார்கள். வேலையும் பார்த்து, அவர்கள் இஷ்டத்திற்கும் இருந்துவிட்டு சம்பளத்தை வாங்கி வர வேண்டும்.
டீச்சர் வேலை, மென்பொருள் வேலை போன்றவற்றில் எப்படி அது பிடித்துச் செய்கிறார்களோ, அப்படித்தான் நானும் இந்தத் தொழிலைப் பிடித்துச் செய்கிறேன். இதில் எந்தவித தவறும் இல்லை. இது என் விருப்பம். ஓர் அலுவலகத்தில் வேலை செய்யும்போது, மருத்துவ விடுப்புகூட 10 நாட்களுக்கு மேல் எடுக்க முடியாது.
ஆனால், இந்த வேலையில் இருப்பதால் என் தனிப்பட்ட மற்றும் குடும்ப வசதிக்கு ஏற்ப இதைச் செய்ய முடிகிறது. என் மகனின் மருத்துவ விஷயங்களைப் பார்த்துக்கொள்ளவோ, என் அம்மாவை கவனித்துக்கொள்ளவோ அல்லது எனக்கே ஓய்வு தேவை என்றாலோ அதை என் விருப்பத்திற்கு என்னால் எடுத்துக்கொள்ள முடிகிறது.
அதேவேளையில், வருமானத்திலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இந்தத் தொழிலை மோசமாகப் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் யாரும் வந்து சாப்பாட்டிற்கு வழியின்றித் தவிக்கும்போது உதவுவதில்லை. எங்களுடைய வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இந்த வேலை உதவுகிறது. எனக்கு அதுதான் முதன்மையானது. மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது இல்லை