திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் அரச பஸ் மோதியதில் துவிச் சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (10) காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பஸ் மஞ்சள் கோட்டை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை சர்தாபுரம்- ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஏ.வசந்த (36வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மஞ்சள் கோட்டினால் வீதியை கடக்க முற்பட்ட போது விபத்து இடம்பெற்றதில் கடுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிரிச்சி அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்