வெல்லம்பிட்டிய, லான்சியா வத்தையில் வயோதிப பெண்ணை தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்து விட்டு, சுமார் 5 மில்லியன் ரூபா தங்கம் மற்றும் பணத்துடன் தப்பி ஓடிய வீட்டுப் பணிப்பெண் மற்றும் அவரது காதலனை கைது செய்துள்ளதாகதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.;கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் ஐந்து மாத கர்ப்பிணி என பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
ஜனவரி 15ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மொஹமட் ஜெகிர் பாத்திமா நசீர் (60) என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் லான்சியா வத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் கீழ் தளத்தை வாடகைக்கு எடுத்து தனது இரண்டு சிறிய பேரன்கள் மற்றும் பணிப்பெண் ஒருவருடன் குடியேறியுள்ளார்.
- Advertisement -
சில காலத்திற்கு முன்பு வேலையிலிருந்து விலகிய பணிப்பெண், இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பணிப்பெண் யுவதியின் மைத்துனர் எனவும், இருவரும் காதலர்கள் என்றும், இதனால் யுவதி கர்ப்பமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சும்மிட்புர மட்டக்குளியில் வசித்து வந்துள்ளனர். காதல் தொடர்பையடுத்து, ஒன்றாக வாழ்வதற்காக சொந்தமாக வீடு ஒன்றை வாடகைக்கு பெற காதலன் தெரிவித்த யோசனையை காதலி முதலில் எதிர்த்துள்ளார். அதற்கு பணம் தேவையென்பதால் எதிர்ப்பு தெரிவித்தார்.
காதலனின் யோசனையின் அடிப்படையில், காதலி முன்னர் பணியாற்றிய வீட்டு எஜமானியை மிரட்டி பணம் பெற இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி செயற்பட்ட பணிப்பெண், ஜனவரி 15ஆம் திகதி இரவு 11 மணியளவில், எஜமானி வீட்டு கதவை திறந்து காதலன் உள்நுழைய வசதியேற்படுத்தினார்.
அப்போது, வீட்டு எஜமானி தூக்கத்தில் இருந்தார். இருவரும் எஜமானியின் வாயை துணியால் கட்ட முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க போராட்டிய எஜமானி, பணிப்பெண்ணின் கையை கடித்துள்ளார்.
வலியால் அலறி துடித்த பணிப்பெண்,தலையணையை எடுத்து எஜமானியின் முகத்தை அழுத்தியுள்ளார். எஜமானியின் இரு கைகளையும் காதலன் அழுத்திப் பிடித்துக் கொண்டார்.
இந்த இழுபறியில் காதலனின் முதுகிலும் எஜமானியின் நகக்கீறல்கள் ஏற்பட்டன. சிறிது நேரத்தில் எஜமானி அசைவற்றுப் போனார். இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 2 தங்கச் சங்கிலிகள், 6 வளையல்கள், 7 மோதிரங்கள், சில வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 200,000 ரூபா பெறுமதியான உள்ளூர் நாணயங்கள் மற்றும் பெண் மற்றும் அவரது மகளுக்கு சொந்தமான ஆடைகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமிட்புரவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி மொனராகலையில் உள்ள விடுமுறை விடுதிக்கு சென்று அங்கு பகல் பொழுதை கழித்துள்ளனர். அப்போது, அந்தப்பெண் அழகு நிலையத்திற்குச் சென்று, முகத்தை பொலிவுபடுத்தியதுடன், தனது தலைமுடியை ஸ்ரைட்டிங் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட போது, வெல்லம்பிட்டியில் வீட்டு உரிமையாளரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மோதிரம் தவிர ஏனைய அனைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது காணாமல் போன தங்க மோதிரம் அக்குறணையில் உள்ள கடையொன்றில் அடகு வைத்து பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது.
கொலை இடம்பெற்ற நான்கு நாட்களில் சந்தேக நபர்கள் இருவரும் மாத்தறை, கண்டி மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதுடன் விடுமுறை விடுதிகளில் தங்கியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.