முல்லைத்தீவு – வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட கொல்லப்பட்ட 61 பேரின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிகழ்வு முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இடைக்கட்டு சந்தி பகுதி மற்றும் விமான தாக்குதல் இடம்பெற்ற செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் இன்று(14) உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
- Advertisement -
செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த பகுதியில் உயிரிழந்த மாணவி ஒருவரின் உறவினரால் இன்று காலை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில் உள்ள நினைவேந்தல் வளைவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிகளில் சிவில் உடைதரித்த புலனாய்வாளர்கள் மற்றும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டதோடு புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர் .
கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர்கள் வளாகத்தில் முதலுதவி பயிற்சிக்காக தங்கி நின்ற மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 54 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.