யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல் படை தொடர்பிலான வழக்கிலிருந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -
இவ் வழக்கு விசாரணை இன்று (20) எடுத்துக்கொள்ளப்பட்ட போது , வழக்கினை மேற்கொண்டு நடத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
- Advertisement -
கடந்த ஆண்டு யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டு சுகாதாரத்தை மேம்படுத்துதல், குப்பைகளை பொது இடங்களில் வீசுபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல், தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது.
குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், காவல் படையை சேர்ந்தவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபனிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், முதல்வரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக வவுனியாவிற்கு அழைத்து சென்றிருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் மறுநாள் முதல்வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்றால் முதல்வர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கில் இருந்து தற்போது முதல்வர் விடுவிக்கப்பட்டதுடன், சீருடைகளையும் மீள கையளித்து உள்ளதால் , காவல் படை என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ , அந்த நோக்கத்திற்காக மீள செயற்படும் என மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.