கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவம் இன்று (06) இரவு 07.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துவிச்சக்கர வண்டியில் பரந்தன் நோக்கி பயணித்த முதியவர் ஒருவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் முதியவரை மோதித் தள்ளி விட்டு படுகாயம் அடைந்த முதியவரை அவ்விடத்தில் விட்டு தப்பி ஓட முற்பட்ட சமயம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அவர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் குறித்த விபத்தினை மூடி மறைக்க முற்பட்ட சமயம் பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது எனவும் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த முதியவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.