உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துத்துள்ள போர் ஏழாவது நாளாகவும் தீவிரம் அடைந்துவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களின் நிலைமை குறித்து பெரும் அச்சம் நிலவி வருகிறது.
- Advertisement -
இந்நிலையில் நேற்று, உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த இதியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் ரஷ்ய ராணுவ தாக்குதலில் மரணம் அடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
- Advertisement -
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்த 21 வயதான நவீன் உக்ரைனின் கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.
ரஷ்ய ராணுவ தாக்குதல் காரணமாக பதுங்கு குழி ஒன்றில் தங்கி இருந்த நவீன், நேற்று உணவு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றபோது நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் நவீன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து இருக்கிறார்.
உக்ரைனில் உயிரிழந்த நவீனின் தந்தை சேகரப்பா கவுடர் -க்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த துரதிருஷ்டமான தகவலை தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சேகரப்பாவுக்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மகன் குறித்து பேசிய சேகரப்பா கவுடர், ” நேற்று காலை 10 மணிக்கு நவீன் போன் செய்தான். காலை சாப்பாட்டிற்காக வெளியே போவதாகவும் வந்த பின்னர் மீண்டும் போன் செய்வதாகவும் சொன்னான்.
ஆனால், அதற்குப் பிறகு கால் வரவே இல்லை. மதியம் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அதிகாரிகள் போன் செய்தனர். என்னுடைய மகன் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் பிரதமர் மோடி மாலை 4.30 மணிக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். கர்நாடக மாநில முதல்வர் பாவ்ராஜ் பொம்மை அவர்களும் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்” என்றார். உள்ளூரில் மருத்துவம் படிக்க அதிக கட்டணம் செலவாகும் எனத் தெரிந்த பிறகு உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மகனை அனுப்பியதாக கண்ணீருடன் தெரிவித்தார்,
இந்த இழப்பை தன்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை என வேதனை வெளியிட்ட அவர், பிரதமர் மோடியிடம் பேசிய போது தன்னுடைய மகனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்ததாகவும், நவீனின் இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடைபெற தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமை அனைவரையும் கலங்க வைத்துள்ளது.