உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
- Advertisement -
கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு, முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அச்செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிக்கையொன்றில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- Advertisement -
இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அனைத்துத் தரவுகளும் மத்திய வங்கியினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் மேற்குறிப்பிட்ட ஊடக செய்திகளில் உண்மைக்குப் புறம்பான தவறான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலையடைகின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடன் மீளச்செலுத்துகை தொடர்பான கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதில் அரசாங்கமும் மத்திய வங்கியும் உறுதியாக இருக்கின்றது என்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த சர்வதேச பிணைமுறிகளுக்குரிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை மீளச்செலுத்துவது சாத்தியமற்றது என்று சிலதரப்பினரால் கூறப்பட்டபோதிலும், நாம் அக்கொடுப்பனவை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கின்றோம்” என்றுள்ளது.