திருகோணமலையில் உள்ள சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் இன்று வெள்ளிக்கிழமை (07-01-2022) காலை திருகோணமலை – புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
சேற்றுப் பகுதியில் இருந்து ச்டலமாக மீட்கப்பட்டவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஜெமீல் நிஸ்வர் என தெரியவருகின்றது.
- Advertisement -
வலத்தாமலை உள்ள சேற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக வயலுக்குச் சென்ற காவலாளி ஒருவர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சடலத்தை பார்வையிடுவதற்காக திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் சம்பவ இடத்துக்கு சென்றதுடன் குறித்த சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையை முன்னெடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
இதேவேளை, தனது கணவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் கைது செய்வதற்கு வீட்டுக்கு வந்ததாகவும், இதேவேளை அவர் தப்பி ஓடியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நானும் கணவரும் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது யான் ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் பேருந்தை மறித்து தனது கணவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதாகவும் இதனையடுத்து கணவர் தப்பி ஓடியதாகவும் நீதவான் முன்னிலையில் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று திரியாய் சந்தியில் வைத்தியசாலைக்கு அருகில் இறக்கிவிட்டு கணவர் வீட்டுக்கு வருவார் என பொலிஸார் கூறியுள்ளார்.
இதேவேளை தனக்கு அருகில் நின்ற பொலிஸாரின் உடையில் சேறு இருந்ததாகவும் இதனால் தனது கணவரை பொலிஸார் துரத்தி சென்றமையினாலேயே சேற்றில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் மனைவி நீதிவான் முன்னிலையில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவான் உத்தரவிட்டதுடன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.