யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
அதேவேளை கடந்த 21ஆம் திகதி தென்னிலங்கையை சேர்ந்த 3 பேர் யாழிலுள்ள இளஞரின் வீட்டுக்கு சென்று அச்சுறுத்திய நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
- Advertisement -
இந்த நிலையில், நேற்றும் (26) அங்கு சென்ற 3 பேர் பொலிசாரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை, கொழும்பை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் யாழ் அரியாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கில் 3,001 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மத்திய வங்கி, அந்த பணத்தை முடக்கியது. அதோடு கனடாவில் இணையத்தளம் மூலமாக மோசடி மூலமாக திருடப்பட்ட பணமென அது கருதப்படுகிறது.
இதனையடுத்து குறித்த இளைஞன் சிஐடியினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பணத்திருட்டில் அவர் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர் வவுனியாவில் அவ் இளைஞன் தங்கியிருந்த போது, குழு ஒன்றினால் அந்த இளைஞன் கடத்தப்பட்ட நிலையில் , அவர் தப்பியோடி பொலிசில் சரணடைந்ததை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் கைதாகினர்.
அதன்பின்னரும், அந்த இளைஞனின் மூலமாக பணத்தை பெற பல தரப்புக்கள் முயன்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அச்சமடைந்த இளைஞன் அடையாளம் தெரியாத இடமொன்றில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் 3 பேர் இளைஞனின் உறவினர்களின் அரியாலை வீட்டிற்கு சென்று தம்மை மத்திய வங்கி ஊழியர்கள் என கூறி, இளைஞனை தொடர்புகொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து சுதாரித்த உறவினர்கள் , வந்தவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் , பொலிசார் அந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.