எதிர்வரும் ஜனவரி 18 மிக முக்கியமான நாளாக இலங்கைக்கு இருக்கும். அதுவரை என்ன நடக்கவிருக்கிறது என்பது குறித்து நிச்சமில்லா நிலையே தெரிகிறது. இலங்கை , வாங்கிய கடனை அடைத்தால் , அடுத்த கட்டத்துக்கு போக பணம் கிடைக்குமா? இல்லை, கடனை அடைக்க இருக்கும் பணம் போதுமா? என எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
- Advertisement -
அரசிலிருப்போர் வாயால் வடை சுடலாம். ஆனால் வடை சுட மாவு மட்டுமல்ல , அடுப்பை எரிக்க விறகு கூட இல்லை எனும் நிலையில் இலங்கை திணறிக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி அளிக்க தயங்குகின்றன. IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல , இலங்கை தயங்குகிறது. காரணம் அவர்கள் போடும் சட்ட திட்டங்களுக்கு இலங்கை அடிபணிந்து செல்ல வேண்டும்.
- Advertisement -
அது இலகுவான காரியம் அல்ல. மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் , நிதி வழங்க முன்னுரிமை கொடுக்காது. அடுத்த தேர்வு இந்தியா மற்றும் சீனா. சொன்னதை செய்யாத இலங்கையை நம்ப , இந்தியா தயாராக இல்லை. இலங்கை , இந்தியாவை தொடர்ந்து ஏமாற்றுகிறது என இந்தியா நினைக்கிறது. அதனால் கோணர் பண்ணுகிறது எனலாம்.
அது உண்மையும்தான். சீனா , எதை வேண்டுமானாலும் கொடுக்க தயார். ஆனால் அதற்கு பெறுமதியான எதையாவது இலங்கை திருப்பி கொடுக்க முன்வர வேண்டும். அப்படியில்லாவிட்டால் சீனாவின் சிகை கூட அசையாது.
இப்படியான இக்கட்டான நிலையில்தான் இலங்கையின் நிதி அமைச்சரான பசில் ராஜபக்ச , இந்தியாவுக்கு நம்பிக்கையோடு சென்றார். ஈழ போர் காலத்தில் , பசில்தான் இந்தியாவோடு நெருக்கமாக பேசி வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஈழ போர் முடிந்த பின் , இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை , இலங்கை நிறைவேற்றவில்லை. ஆற்றை கடக்கும் வரைத்தான் அண்ணன் , தம்பி. ஆற்றை கடந்த பின் நீ யாரோ? நான் யாரோ? அப்படித்தான் இலங்கை நடந்து கொண்டது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை மற்றும் சீனாவுடனான நெருக்கமான உறவு ஆகியன இலங்கை மீது இந்தியாவுக்கு நம்பிக்கையீனத்தை அதிகரிக்க காரணமாயின. ஆனாலும் இலங்கை , எதை செய்தாலும் இந்தியாவை பாதிக்கும். இந்தியாவால் இலங்கையை ஒதுக்கவும் முடியாது. அணைத்துக் கொள்ளவும் முடியாது. ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே போதும்.
குழந்தை கேட்பதையெல்லாம் கொடுத்தால் அது கட்டுப்பாட்டை இழந்துவிடும். இது வேண்டுமானால் இதை செய் தியரியைதான் இந்தியா செய்கிறது. இலங்கை அரசுக்குள் உள்ளவர்கள் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள்.
கிளீன் சூட் எம்டி பொக்கட் நிலைதான் தெரிகிறது. பண புழக்கத்துக்காக நோட்டு நோட்டாக அடித்தவர்கள் , பணம் வீரியமற்று போகும் என நினைக்கவே இல்லை. எல்லாமே சிக்கல். தேடி தேடி கையேந்தியவர்கள் , திருப்பி கொடுக்க வழியின்றி திசை தெரியாது நிற்கிறார்கள்.
இந்த நிலையில்தான் 500 டொலர் மிலியன்களை பெற்றுக் கொண்டு வரும் நம்பிக்கையோடு , பசில் இந்தியாவுக்கு பயணமானார். 500 டொலர் மிலியனுக்கு பதிலாக 1.5 மிலியன் டொலரைத்தான் இந்தியா இலங்கைக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கை அரச தரப்போ டொலர் மிலியன் 400 கிடைத்ததாக சொல்கிறது.
உண்மை – பொய் தெரியாது. இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் நம்பிக்கையோடு பசில் இந்தியாவுக்கு சென்ற போதிலும் , மோடி , நேரமில்லை என பசிலை சந்திக்கவில்லை. அவருக்கு பதிலாக நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை மட்டுமே பசிலால் சந்திக்க முடிகிறது.
ஆரம்பத்தில் நிர்மலா மற்றும் ஜெய்சங்கரை தனி தனியாக சந்தித்த பின் மோடியை சந்திப்பதே நிகழ்ச்சி நிரலாக இருந்தது. ஆனால் நிர்மலா மற்றும் ஜெய்சங்கர் இவரும் ஒன்றாக பசிலை சந்திக்கிறார்கள்.
அந்த சந்திப்பில் இலங்கை ஒப்புக் கொண்டு நிறைவேற்றாத பல விடயங்கள் குறித்து பசிலோடு பேசுகிறார்கள். அதாவது இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை காற்றில் பறக்க விட்டமையை சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதில் மாகாண சபை தேர்தலை நடத்துவது , தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது , துறைமுக பிரச்சனை , பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்குவதாக கொடுத்த வாக்குறுதி , 13வது திருத்தச் சட்ட அமுலாக்கல் ஆகியவை குறித்து ஒவ்வொன்றாக நிர்மலா சீதாராமன் குற்றப்பத்திரிகையை வைத்த போது , ஜெய்சங்கரும் தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
பசில் , அங்கே மிகவும் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு மௌனமானதாக தெரியவருகிறது. அதன்பின் பிரதமர் மோடியின் சந்திப்பு இடம் பெற இருந்தாலும் , மோடிக்கு நேரமில்லை என பசிலை சந்திக்காது தட்டிக் கழித்துள்ளார். பசில் , மோடிக்கு முக்கியமான ஒருவர் அல்ல எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதையே அவதானிக்க முடிகிறது.
அதே சமயம் பிரதமர் மகிந்தவும் , மத்திய வங்கி ஆளுநரும் , சீன அதிகாரிகளை சந்தித்து டொலர் மிலியன் 1500 யை எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தார்கள். கடந்த சில காலமாக சீன – இலங்கை உறவு நல்ல நிலையில் இல்லை. எனவே அவர்கள் பணம் வழங்கலுக்கான பத்திரங்கள் தயாராகவில்லை எனும் சாக்கு போக்கான கதையொன்றை சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இறுதியில் சீன அதிகாரிகள் ” நீங்கள் கேட்கும் டொலர் மிலியன் 1500 யை தரலாம். ஆனால் நீங்கள் அதை செலவு செய்ய முடியாது. அதை ஒரு நிரந்தர வைப்பாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு ஒன்றை விதிக்க ஒப்புதல் தருமாறு கேட்டுள்ளார்கள். சீன அதிகாரிகளோடு பேசிவிட்டு வெளியே வந்த பிரதமர் மகிந்த , “அந்த பணம் கிடைத்தாலென்ன , கிடைக்காவிட்டால் என்ன? பாவிக்க முடியாவிட்டால் அது எதற்கு” என விசனப்பட்டுள்ளார்.
ஜனவரி 18 ல் திருப்பி செலுத்தி கடனை அடைக்க வேண்டிய பணம் , வெளியில் இருந்து கிடைக்காமல் போய் , மத்திய வங்கியில் இருக்கும் பணத்தை கொண்டு , உள்ள கடனில் ஒரு பகுதியையாவது அடைக்க முற்பட்டால் நாடு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
அதாவது நாட்டு மக்களுக்கு உண்ண உணவு கூட இல்லாமல் போய்விடும் அபாயமே உள்ளது. அதேநேரம் கடனை அடைக்காவிட்டால் நாடு திவாலான நிலைக்கு ஆளாகும். இப்போதுள்ள நிலையில் கடனை அடைத்தாலும் பிரச்சனை. கடனை அடைக்காது போனாலும் பிரச்சனை.
அடுத்துள்ள தேர்வு IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான். IMF விதிக்கும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இலங்கை ஒப்புதல் அளிக்க வேண்டும். அவை சிங்கள மக்களை மகிழ்விப்பதாக இருக்காது.
அப்படியான நிலைக்கு தள்ளப்படும் போது , ராஜபக்ச ஆட்சி மீது மக்களது வெறுப்பு அதிகரிக்கும் நிலையே உருவாகும். ஜனவரி 18 , இலங்கைக்கு ஒரு திசை மாற்றமாகவே இருக்கும்? என ஜீவன் பிரசாத் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.