தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Advertisement -
அந்த செய்தியின் படி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த 25ம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நாளைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டது. பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்கள் இருவர் இந்த தங்கத்தை முன்கூட்டியே தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டுக்கே சென்று உதவி கோரப்பட்ட போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார். நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் கோரியுள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார தமிழ்வின் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவிய போது, குறித்த விடயத்தை அவர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.