இழந்து போன ஆட்சியை பிடிக்க வேண்டும் என விடாமுயற்சியுடன் கூட்டணியாக களமிறங்கி, மிகப்பெரிய வெற்றி பெற்று ஆரியாசனம் ஏறிய ராஜபக்ஷர்களுக்கு இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
பெரும்பான்மை மக்களின் அமோக வாக்குகளை பெற்று அசைக்க முடியாத அரசாங்கம் என்ற இறுமாப்புடன் நகர்ந்த நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறுக தொடங்கின.
- Advertisement -
இராணுவத்தில் பல அசாத்தியங்களை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டபாய, அரசியல் சார்ந்த அரசாங்கத்தையும் இலகுவாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் நலிவடைந்து வருகின்றன. இதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக உலகை அச்சுறுத்தும் கோவிட் பரவல் ஆகும்.
ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அதனை காப்பாற்றும் தீவிர முயற்சியில் ராஜபக்ஷர்கள் ஈடுபட்டாலும், அது பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துவதாகவே தெரிய வருகிறது.
ராஜபக்ஷ சகோதரர்கள் என்ற ஒரே நாமத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது மஹிந்த, கோட்டபாய, பசில் என மூன்று பிரிவுகளாக பிரிந்து செயற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பல்வேறு சுமைகளை குறைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது ராஜபக்ஷர்களால் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் காலத்தின் கோலம் அனைத்தும் தலைகீழாகி, மக்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையை நன்கு உணர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டபாய அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக மஹிந்த ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருமுறை ஜனாதிபதியாகவும் பல முறை பிரதமராகவும் செயற்பட்ட மஹிந்த அனுபவம் வாய்ந்த அரச தலைவராகும். எனினும் அவரின் முடிவுகள் நிராகரிக்கப்படுவதுடன் அரசியலில் புதிதாக நுழைந்துள்ள கோட்டபாய முடிவுகளை எடுக்கும் சக்தியாக உள்ளார்.
சம்பிரதாய நடைமுறைகளை தவிர்த்து தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் கோட்டபாயவின் செயற்பாடுகள் உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அதில் ஒன்று தான் இரசாயன பசளைக்கு பதிலாக சேதன பசளையை பயன்படுத்துவது என்பதாகும்.
தற்போது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் எதிர்காலத்தில் அது சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கோட்டபாயவின் நம்பிக்கையாகும்.
ஜனாதிபதியாக மஹிந்த இல்லாத போதும் பெரும்பாலான சிங்களவர்களால் மஹிந்தவே ஜனாதிபதி என்ற எண்ணம் இன்றும் மனதளவில் உள்ளது. வெற்றிகரமான அரச தலைவராக அவர் மக்கள் மத்தியில் மாறியுள்ளார். அதற்கு ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் சிங்கள மக்களுடன் மஹிந்த கையாண்ட உத்தியின் வெளிப்பாடும் வெற்றியும் இதுவாகும்.
தற்போதைய ராஜபக்ஷகளுக்கு இடையிலான மோதலுக்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிய வருகிறது. இவ்வாறான மக்களின் எண்ணவொட்டம் அடுத்த தவணைக்கான கோட்டபாயவின் ஜனாதிபதி கனவு நிராசையாகவும் வாய்ப்புகள் உள்ளன. இதனை நன்கு உணர்ந்து கொண்ட கோட்டபாய உள்ளக ரீதியாக பல்வேறு காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகிறார்.
அதன் பிரதான அங்கமாக நிதியமைச்சை மஹிந்தவிடமிருந்து பறிந்து பசிலிடம் கொடுத்தாகும். இந்த செயற்பாடுகளை அடுத்து மஹிந்த தரப்புக்கும் கோட்டபாய தரவுக்கும் இடையிலான இடைவெளிகள் அதிகரிக்க தொடங்கின.
தற்போதைய நிகழ்வுகளால் மனமுடைந்த மஹிந்த ஆட்சியிலிருந்து விலகவுள்ளதாகவும் அடுத்த பிரதமராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்கவுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகின. இது குறித்து ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையில் பல உடன்பாடுகளும் எட்டப்பட்டதாக பல சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி குறுகிய காலத்தில் அசாத்திய வெற்றிகளை பதிவு செய்து அரசியல் தளத்தில் அதிகம் பேசப்பட்டது. இதன் பிரதான மூளையாக செயற்பட்டவர் பசில் ராஜபக்ஷ. பசிலின் அரசியல் சாணக்கியம் ஐக்கிய தேசிய கட்சியை எந்தவொரு ஆசனங்களை வெற்றி கொள்ள முடியாத அளவுக்கு படுதோல்வி அடைய வைத்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபாய, மஹிந்தவை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் உள்ளக மோதல்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது மஹிந்தவின் அண்மைக்கால செயற்பாடுகள்.
அரசியல் ரீதியான மற்றும் சம்பிரதாய ரீதியான நிகழ்வுகளில் மஹிந்த கலந்து கொள்வதை தவிர்த்து வருவதுடன், அதில் நாமல் ராஜபக்ஷ கலந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷர்களின் மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சமகால அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மைத்திரி, அரசாங்கத்திலிருந்து விலகி மாற்று அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த அதிக நேரம் செல்லாது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதேவேளை, ஆளும் தரப்பிலுள்ள உறுப்பினர்களும் மனமுடைந்த நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறான சூழ்நிலை ஆட்சி மாற்றத்திற்கான ஒரு தளமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ராஜபக்ஷர்களின் மோதல் வெளிப்படையாக உச்சமடையும் வேளையில், அது தென்னிலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே தற்போதைய சூழ்நிலையாகும்.