அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
கடந்த புதன்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலின் பின்னரே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரகசிய கலந்துரையாடலில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
எனினும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர ஆகியோரும் இந்த வாரம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இனியும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதால் தான் இராஜினாமா செய்ய வேண்டும் என யூடியூப் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஒரு முட்டாள்தனமான அரசாங்கம் என டியூ குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் கடுமையான மற்றும் இரக்கமற்ற விமர்சனமாக உள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையினால் பிரதமர், ஏனைய பிரதான கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து நேரடி கலந்துரையாடல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.