யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவன் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
- Advertisement -
இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர்.
- Advertisement -
இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியை பொலிஸார் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கூறப்படுகின்றது.
கைதானவர்கள் யாழ். நகரம், நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள், கைக்கோடாரி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.