இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரிப்பர் சாரதி ஒருவர் பலியானதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில் இன்று (21) மாலை 5.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இராஜாங்க அமைச்சரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கொலையுண்ட மணல் ரிப்பர் சாரதி மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்றையத்தினம் குறித்த ரிப்பர் சாரதி முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் சம்பவம் இடம்பெற்ற வேளையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அவ்வீட்டில் இருந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் தலைமையில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர், பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித ரோஹன தெரிவித்துள்ளார்.