சிறிலங்காவின் அரச வங்கிகளுக்கு எதிராக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்காவுடன் சேதனப் பசளை விவகாரத்தில் முரண்பட்டுக்கொண்ட சீன நிறுவனமான சீவின் பயோடெக் (Seawin Biotech) தெரிவித்துள்ளது.
- Advertisement -
ஏர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்கள் தமது தயாரிப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், சிறிலங்காவின் அரச வங்கிகள் பணம் செலுத்தத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
சீவின் பயோடெக் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பின் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கையின்படி, கப்பல் மூலம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்ட சீவின் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் தொன் சேதனைப் பசளைகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சீவின் பயோடெக் நிறுவனம் சிறிலங்காவின் அரச வங்கிக்கு எதிரான தரநிலைகள் மற்றும் புவர்ஸ் தரப்படுத்தல் (Poor’s) மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை (Moody’s) மற்றும் ஃபிட்ச் தரப்படுத்தல் ஆகிய முன்னணியான மூன்று சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களுடன் தொடர்புடைய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தொடர்புடைய அபாயங்களை நினைவூட்டுவதற்காக தமது நிறுவனம் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக சீவின் பயோடெக் நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்போவதாக ஏற்கனவே சீன நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், குறித்த நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.