தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடவைத்து சர்ச்சைக்குள்ளான லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- Advertisement -
இதற்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு லொஹான் ரத்வத்தவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.
- Advertisement -
இத்தாலியிலிருந்து லொஹான் ரத்வத்தவை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்துள்ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் அன்று சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை முழந்தாளிட வைத்து, துப்பாக்கியை எடுத்து மிரட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் அவரது இராஜினாமா கடிதத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற்சாலை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை எனவும் கூறப்படுகின்றது.
எனினும் லொஹான் ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன் சிறைச்சாலைகளில் தன்னால் இழைக்கப்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பதவி விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.