புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் பகுதியில் உயிரிழந்த வயோதிபரின் உடலத்தினை வீட்டிற்கு வழங்கிய முல்லைத்தீவு மருத்துவமனை நிர்வாகம், 29ஆம் திகதி இரவு பி.சி.ஆர் முடிவில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உடலத்தினை மருத்துவமனை நிர்வாகம் மீளப்பெற்றுள்ளது.
- Advertisement -
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு 29 ஆம் திகதி மாலை வெளியாகியுள்ள நிலையில் 29 ஆம் திகதி நண்பகலே உடலத்தினை வீட்டிற்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளதால் கிராமத்தில் அச்சநிலை ஏற்றபட்டுள்ளது.
- Advertisement -
கடந்த 25.08.21 அன்று விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் வீட்டில் உயிரிழந்த 77 அகவையுடைய சற்குணம் மங்களாதேவி என்ற வயோதிபரின் உடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 27.08.21 அன்று பி.சி.ஆர் எடுக்கப்பட்டு 28.08.21 அன்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுள் 29.08.21 அன்று மாலை 5.00 மணிக்கே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அன்று நண்பகல் 1.00 மணியளவில் கொரோனா தொற்று இல்லை என உடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கிவைத்துள்ளது.
வள்ளுவர்புரம் பகுதியில் உயிரிழந்த வயோதிபரின் இறுதி நிகழ்வு 30.08.21 இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பலர் உடலத்தினை பார்வையிட்ட மரணவீட்டிற்கும் சென்று திரும்பியுள்ள நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 30ஆம் திகதி மரணவீட்டின் உறவினர்கள் இறுதி நிகழ்விற்கு தயாராகிய நிலையில் 29 ஆம் திகதி இரவு பொதுசுகாதார பரிசோதகரால் உயிரிழந்தவருக்கு கொரோனா என தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தினால் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டு உடலம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான சம்பவம் உறவினர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடலத்தனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பொதுசுகாதார பரிசோதகர் சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தகுந்த ஆதாரத்தினை கோரியுள்ளதுடன் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது ஒரு குழப்ப நிலை ஏற்பட்டு சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிசார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி கெங்கதீஸ்வரன் ஆகியோர் வந்து உறவினர்களுக்கு உண்மை நிலையினை எடுத்துரைத்துள்ளார்கள். மருத்துவமனை நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளதையும் தெரியப்படுத்தி உடலத்தினை மின்சார தகன சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா மாவட்டம் கொண்டுசென்றுள்ளார்கள்.
இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தினையும் தோற்றிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவரின் மரணவீட்டிற்கு பலர் சென்று வந்த நிலையில் அவர்களை இனம் கண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.