மக்களை வீடுகளுக்குள் வைத்திருப்பதற்கு பதில் அவர்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு நாட்டை அரசாங்கம் முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞான ரீதியான முடக்கல் அவசியம், பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் நாளாந்த பிசிஆர் சோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளது.
- Advertisement -
முக்கிய வீதிகளை அவதானிக்கும்போது அதிகளவானவர்கள் வீதிகளில் காணப்படுகின்றனர். அவர்கள் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபடுகின்றனர் என்பது புலனாகின்றது. விஞ்ஞான ரீதியிலான முடக்கல்களை கோருவதன் மூலம் நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது சுகாதார அதிகாரிகளிற்கும், அரசாங்கத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தவோ முயலவில்லை.
அடிப்படை தரவுகளை ஆராய்ந்த வேளை புதிய கோவிட் வைரஸின் பயணப்பாதை தெளிவாக புரிந்ததன் காரணமாகவே விஞ்ஞான ரீதியிலான முடக்கலை கோரியிருந்தோம். அதிகாரிகள் முரணான தரவுகளை வெளியிட்டுள்ள நிலையில், வைரஸ் தனது பாதையில் பயணிப்பதை தொழில்சார் நிபுணர் எவராலும் விளங்கிக் கொள்ள முடியும். கடந்த சில நாட்களின் தரவுகள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை என்பதை தெளிவாக காண்பித்துள்ளன.
அரசாங்கம் முடக்கலையும், போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தாததன் காரணமாக எதிர்காலங்களில் நோயாளர்கள் எண்ணிககை அதிகரிக்கும் போது நாட்டை மீண்டும் முடக்க வேண்டியிருக்கும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அதன் பயணப்பாதையை துண்டிப்பதே சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை. இதற்கு பத்து நாட்கள் தேவைப்படும் அதேவேளை பெருமளவான மக்கள் வீடுகளுக்குள் இருந்தாலே இது சாத்தியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.