இலங்கையில் மதுபானம் கொள்வனவு செய்யக்கூடிய வசதியுடைய, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கான கொரோனா நிவாரண நிதியை வழங்காமல் தவிர்க்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கோரியுள்ளது.
- Advertisement -
குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பத்திலுள்ள ஒருவருக்கு மதுபானம் வாங்க முடியும் என்றால் அவருக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இயலுமை உள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் நிவாரணம் பெறக்கூடிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் மதுபானம் கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டையை பதிவு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான், நாடு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன்படி செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மதுபானங்களை கொள்வனவு செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பனவுகளை விநியோகிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், நிவாரணம் பெறுவதற்கு அதிக தகுதியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவை அதிகரிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் குறைந்த மக்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.