நாட்டில் தற்போது நிலவும் கோவிட் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
- Advertisement -
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் தனியார் துறை பேருந்துகள் சேவையை முன்னெடுத்து வருகின்றன.
- Advertisement -
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் 40 வீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளதுடன், குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.