இலங்கையின் மருத்துவதுறை முழுவதும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், உடனடியாக நாட்டை முடக்கினாலும் கூட அடுத்த பத்து நாட்களின தலைவிதியை மாற்ற முடியாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இந்த செய்தியை நாட்டின் மருத்துவ நிபுணர்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் நாட்டை முடக்கினால் கூட அடுத்த பத்து நாட்களிற்கு நாட்டின் தலைவிதியை மாற்ற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இதேவேளை நாட்டின் எந்த மாகாணத்தில் டெல்டா வைரஸ்பரவியுள்ளது என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் டெல்டா பிளஸ் பரவல் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்டா வைரஸ் பரவுவது வேகமாக நிகழும்போது அது மாற்றமடைந்து டெல்டா பிளஸ் ஆக மாறுகின்றது இலங்கையில் இதுவரை இதனை கண்டுபிடிக்கவில்லை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா கொரோனா வைரசே கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ள மருத்துவர்கள், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் 2500 முதல் 2800 வரையிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என தெரிவித்தாலும் உண்மையான எண்ணிக்கை 4000மாகயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது வெளியாவது கடந்த 8 முதல் பத்து நாட்களிற்குள் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையே இந்த நாட்களில் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்வரும் பத்து நாட்களின் பின்னரே தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ உள்ளக அறிக்கையின் படி ஒக்சிசன் தேவைப்படும் 614 நோயாளிகள் மருத்துவமனையின் தீவிரகிசிச்சை பிரிவில் உள்ளனர், திங்கட்கிழமை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுவரபட்ட இரண்டு நோயாளிகள் ஒக்சிசன் அளவு குறைவடைந்ததால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வரும் நாட்களில் ஓக்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கலாம் என்றும், இதன் காரணமாக மருத்துவமனைகளில் தேவைப்படும் ஒக்சிசன் அளவு அதிகரிக்கலாம் எனவும் மருத்துவர்கள் எதிர்வு கூறுகின்றனர்.