கொரோனா தடுப்பூசிகளின் நோயெதிர்ப்பு சக்தியின் நிலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. எமது நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் தரம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் எதிர்வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய கொரோனாஅலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் மலிக் பீரிஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கைக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
- Advertisement -
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோய் பரவல், தொற்றாளர்கள் மற்றும் இறப்பு ஆகியவற்றின் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அவசர பிரச்சினை என்பதால், பின்வரும் கேள்விகளுக்கு உறுதியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
விசேடமாக கடந்த சில வாரங்களில் கொரோனா நோய்த்தொற்றாளர்கள், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் இறப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் மேலுமொரு கொவிட் அலை உருவாகி வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
மேலும் கடந்த 10 நாட்களில் பதிவான கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை, கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை, பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவை இந்த சபைக்கு வழங்கப்படுமா? இதுவரை உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைகள் என்ன? அவற்றில் இந்நாட்டில் இனங்காணப்பட்ட வகைகள் யாவை? என்பதை தெரிவிக்க முடியுமா?.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷில்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசி என்றவாறு தற்போது இலங்கையில் வழங்கப்படும் ஐந்து தடுப்பூசிகளினதும் செயற்திறன் என்ன?.
அத்துடன் மற்றொரு கொரோனா அலை உருவாகும் சூழலில் கொரோனா பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட விதிமுறைகளை தளர்த்துவது பொருத்தமானதா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக பஸ் வண்டிகள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பில் தங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சுகாதார பணிமனையின் விசேட வைத்திய நிபுணர் ஹேமன்த ஹேரத் தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த கூற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?
மேலும், எதிர்வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய கொவிட் அலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வைரஸ் தொடர்பான முன்னணி விசேட வைத்திய நிபுணர் மலிக் பீரிஸ் பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற முக்கிய பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.