பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைத்து சிறுவர்களின் வேதனமும் தரகரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
- Advertisement -
எனினும், அந்தப் பணத்தில் ஒரு தொகையை மாத்திரம் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அந்தத் தரகர் வழங்கியுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார். சிறுவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அந்தத் தரகர் வருமானம் ஈட்டியுள்ளமை இதன்மூலம் தெரியவந்துள்ளதாகவும், இந்த முறைமையானது பெருவாரியாக இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டவர்களை நேற்று மன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவரது வீட்டில் முன்னதாக பணிப்புரிந்த 22 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் அனைவரையும் 48 மணிநேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின்போது, பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் குறித்த விடயங்களை மன்றில் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்த சிறுமிக்கு, 16 வயது பூரணமடைந்து நான்கு தினத்தின் பின்னர், அதாவது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சிறுவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தும் வர்த்தகத்திற்கு இது சிறந்த உதாரணமாகும் என்றும் மன்றின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள டயகம பகுதியைச் சேர்ந்த தரகர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு, 11 சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி அந்த வீட்டில் துன்புறுத்தப்பட்டமை தொடர்பிலும் பிரதி மன்றாடியார் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறுமி அந்த வீட்டில் 6க்கு 4 அடி அளவான சிறிய அறையில் தங்கி இருக்க வேண்டியிருந்ததுடன், சுமார் 8 மாத காலமாக தனியே வாழ்ந்த அவர், பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்திருந்ததாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, சட்டமா அதிபரினால் சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா? என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.