நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் தற்பொழுது வெளிவர ஆரம்பித்துள்ளன. கடந்த 6ஆம் திகதி ஹிஷாலினியின் தாயார், ரிஷாட்டின் இல்லத்திற்குச் செல்லவிருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரான பிரனீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி, பொன்னையா என்ற டயகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஊடாகவே ரிஷாட்டின் இல்லத்திற்குத் தொழில்பெற்றுச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் பொன்னையாவுக்கு 5000 ரூபா அளிக்கப்பட்டதாகவும், இஷாலினி மற்றும் பொன்னையா பயணம் செய்த முச்சக்கர வண்டிக்கு வாடகையான 5000 ரூபாவும் ரிஷாட் வீட்டிலிருந்து கொடுக்கப்படடதாகவும் பிரனீத்தா வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.
- Advertisement -
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் இவர் மாதச் சம்பளமாக 20 ஆயிரம் ரூபாவுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதோடு இதுவரை இஷாலினியின் தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபா பொன்னையா ஊடாக அளிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஹிஷாலினி அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்து குறித்த இல்லத்தின் வளாகத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த அறையில் ஹிஷாலினி தங்கவைக்கப்பட்டார். அதில் இரும்பினாலான கட்டில் மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் ஹிஷாலினியின் தாயார் 4 தடவைகள் அவரை சந்திக்க குறித்த வீட்டிற்கு வந்த போதிலும் ஹிஷாலினி புத்தளம் வீட்டில் இருப்பதாகக்கூறி சந்திக்க மறுத்திருக்கின்றனர். இதனிடையே பொன்னையா ஊடாக அண்மையில் ஹிஷாலினி தனது தாயாருடன் உரையாடியுள்ளார்.
அதன்போது ரிஷாட் வீட்டில் உள்ளவர்கள் தன்னை தும்புத்தடியால் அடி ப்பதாக ஹிஷாலினி முறையிட்டுள்ளார். எனினும் வேலைகளை விரைவாக செய்யாத காரணத்தினால்தான் திட்டியதாக வீட்டிலிருந்த ரிஷாட்டின் மனைவி தெரிவித்ததாக பிரனீத்தா வர்ணகுலசூரிய குறிப்பிடுகின்றார்.
இதேவேளை ரிஷாட்டின் இல்லத்தில் இளைஞர் ஒருவரும் தொழில்செய்கின்ற விடயம் அங்கு சென்று விசாரித்தபோது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டபோது, ஹிஷாலினி தீ்க் காயங்களுடன் பிரதான அறைக்குவந்து அமர்ந்து தண்ணீர் கேட்டதாகவும், அதன் பின் அங்கிருந்த மீன்தொட்டியில் பாய்ந்ததாகவும் ரிஷாட்டின் இல்லத்திலிருந்தவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரான பிரனீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் நடத்துகின்ற விசாரணையில் அழுத்தங்கள் இருக்கலாம் என்றும், விசாரணை முழுமையான சுயாதீனத்துடன் நடைபெறுவது சந்தேகமாகவே இருப்பதாவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.