நடமாடும் தடுப்பூசி நிலையங்களை விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
- Advertisement -
தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கடந்த சில நாட்களாக அடையாளங்காணப்பட்டுள்ள COVID நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்.
இதனால், தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது தொடர்பில் அறிவூட்டுவது குறித்தும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
எந்த துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு ,எந்தவோர் இடத்திலும் இலகுவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆயுர்வேத மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்ற எவரும் மரணமடையவில்லை என்பதுடன், விரைவாகக் குணமடைந்திருப்பது தொடர்பான விசேட ஆய்வை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அமைச்சர் ரமேஷ் பத்திரன ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, சுதேச ஔடதங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.