கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தலின் தற்போதைய நிலைவரத்திற்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் உயர்வாக இருப்பதன் காரணமாக, அந்நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருகைதருவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
இருப்பினும் அந்நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மேற்படி நாடுகளில் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருப்பினும் இங்கு அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியின் பின்னரான காலத்தில் கடந்த திங்கட்கிழமையே முதன்முதலாக நாளொன்றில் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக நேற்றும் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்களே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
12 வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான சுகாதார வழிகாட்டல்கள்
இலங்கையர் அல்லாத எவரேனும் வெளிநாடுகளிலிருந்து வருகைதருவதாயின், அதுகுறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கவேண்டும்.
அமைச்சில் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கு வருகைதருபவர்கள் அவர்களது விமானப்பயணத்திற்கு 72 மணித்தியாலத்திற்குட்பட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருக்கவேண்டும்.
இலங்கைக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டும்.
தமது நாட்டிலேயே கொவிட் – 19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள், தடுப்பூசியை அட்டையையோ அல்லது அதற்குரிய ஆதாரத்தையோ காண்பித்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படத்தேவையில்லை.
வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் இலங்கையர்களுக்கான சுகாதார வழிகாட்டல்கள்
அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப்பிரஜைகள் மீண்டும் நாடு திரும்புவதாக இருந்தால், அவர்கள் வெளிவிவகார அமைச்சில் அனுமதிபெறத்தேவையில்லை.
எனினும் அதனைத்தவிர மேற்குறிப்பிட்ட அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்றவேண்டியது கட்டாயமாகும். மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகைதருபவர்கள், தமக்குத் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி;ப்படுத்துவதற்கு அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மாற்றியமைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொவிட் – 19 உயர் அச்சுறுத்தல் கொண்ட நாடுகளிலிருந்து வருகைதருவோருக்கான அறிவிப்பு
மேலும் இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் உயர்வாக இருப்பதன் காரணமாக, அந்நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருகைதருவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பலாம். மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் இந்நாட்டுப்பிரஜைகள் வெளிவிவகார அமைச்சு, சுகாதார மேம்பாட்டுப் பணியகம், விமானசேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கவேண்டும்.
அதேபோன்று மேற்படி நாடுகளிலிருந்து வருகைதரும் இலங்கையர்கள் அந்நாடுகளில் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருப்பினும், இங்கு அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது அவசியமாகும்.
டெல்டா வைரஸ் பரவல் நிலைவரம்
ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் போது அவர் எந்த வைரஸ் திரிபின் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார் என்பதை உடனடியாகக் கூறுவது கடினமானதாகும்.
ஆகையினால் நாட்டில் எத்தனை பேர் டெல்டா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கூறுவதும் கடினமானதாகும். ஆனால் தற்போதுவரையில் கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், கொழும்பிற்கு வெளிப்பிரதேசங்களிலும் டெல்டா வைரஸ் பரவியுள்ளமையினை அறியமுடிகின்றது.
தற்போது இந்த டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் மரணங்களும்
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 1515 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 43 கொவிட் – 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. மரணங்கள் 8 ஆம் திகதி வியாழக்கிழமை பதிவானவையாகும்.
அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,927 ஆக உயர்வடைந்திருப்பதுடன், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 241,035 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 25,520 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.