பலாங்கொடை பின்னவல கெப்போக் கீழ் பிரிவு தோட்டத்தில் 8 வயது சிறுவனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்திய தந்தை பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி தனது 7 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகன்களையும் தனது கணவரிடம் ஒப்படைத்து விட்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
- Advertisement -
பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு தந்தை வேலைக்குச் சென்றுவிடும் நிலையில் குறித்த பிள்ளைகளே வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வேலைக்கு சென்று இரவு வேலைகளில் வீடு திரும்பும் தந்தை மது போதையிலேயே வீட்டுக்கு வருவதுடன் பிள்ளைகள் செய்த சிறு சிறு தவறுகளுக்கும் பாரிய அளவில் தண்டனை கொடுப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எட்டு வயது மகன் செய்த சிறு தவறொன்றுக்காக கம்பி ஒன்றில் சிறுவனைக் கட்டிப்போட்டு தந்தை நேற்று முன்தினமும் அடித்துள்ளார். அடி வலி தாங்கமுடியாது சிறுவன் கதறியுள்ளார். அச்சத்ததை கேட்ட பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் கதவை உடைத்து குறித்த சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் இப்பிரதேச மக்கள் இது குறித்து பின்னவல பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலுக்கமைய அவரை கைதுசெய்த பொலிஸார் சிறுவர்கள் இருவரையும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதித்தனர். அத்துடன் சந்தேகநபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்தவுள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.