உடுவில் – மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
- Advertisement -
உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையில் ஈடுபடும் குடும்பஸ்தர் ஒருவரை சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தடவைகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வீட்டிற்கு அருகாமையில் சமாதான நீதிவான் ஒருவர் வசித்து வரும் நிலையில் சமாதான நீதிவானே தமது கசிப்பு விற்பனை தொடர்பான தகவலை பொலிஸாரிற்கு தெரியப்படுத்தியதாக தெரிவித்து முரண்பட்டுள்ளனர்.
தகாத வார்த்தைகளைப் பேசி சத்தமிட்ட நிலையில் அயல் வீடுகளில் பெண்கள், மாணவர்கள் உள்ள நிலையில் இவ்வாறு சத்தம் போட வேண்டாம் எனக் கூறியும் தொடர்ந்து முரண்பட்டதால் சமாதான நீதிவானின் சகோதரன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பேசி சத்தமிட்ட நிலையில் ஏன் இவ்வாறு சத்தம் போடுகிறீர்கள் எனக் கேட்கச் சென்ற இளைஞன் மீது கசிப்பு விற்பனைக்குழு திடீரென வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சுன்னாகம் பொலிஸாருக்கு தெரிவித்தும் பொலிஸார் உடன் சம்பவ இடத்திற்கு வரவில்லை . பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வாள்வெட்டு சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
குறித்த கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பத்தினரால் அக்கிராமத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸார் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.