வவுனியா பொது வைத்தியசாலையில் மரணித்த சிறுமி ஒருவரின் சடலம் வைத்தியசாலையால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- Advertisement -
எனினும் சிறுமியின் நேய்க் காரணிகளை அடிப்படையாக வைத்தே சடலம் சீல் வைக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பூணாவ பிரபோதகம கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில், சடலத்திற்கு பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிக்கப்பட்ட நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் கொரனா தொற்று இல்லை என கிடைக்கப்பெற்ற நிலையில் சடலத்தினை பொறுப்பேற்க சென்ற உறவினர்களிடம் சிறுமியின் சடலத்தினை திறக்க முடியாதவாறு சீல் செய்து வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சடலத்தினை பிரேத அறையில் வைத்திருந்த போது குளிரூட்டி செயற்படாமையால் சடலம் பழுதடைந்துள்ளது. இறுதியில் பிள்ளையின் முகத்தை கூட பார்க்க முடியாதவாறு செய்துவிட்டனர் என தெரிவித்தனர்.
எனினும் இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டபோது, சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையான அவதானத்தை செலுத்தியிருந்தேன். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பயனளிக்காது போய் விட்டது.
பி.சிஆர் அறிக்கை கொரனா தொற்று இல்லை என்றே தெரிவித்திருந்தது. எனினும் அவரது நோய் நிலைகளை கேட்டதன் அடிப்படையில் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்தது. இவ்வாறான நிலையில் சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு சடலம் சீல் வைத்து வழங்கப்பட்டது.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையின் அனைத்து குளிரூட்டி வசதிகளும் சிறப்பாக இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.