மேல் மாகாணத்துக்குள் கட்டுப்பாடுகளை மீறுகின்ற வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த கோரிக்கையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திடம் விடுத்துள்ளார்.
- Advertisement -
நடமாட்ட கட்டுப்பாட்டு தளர்வு தொடர்பில் பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்று(25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன.
- Advertisement -
இலங்கையை பொருத்தமட்டில் கொவிட் வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதை பொதுமக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
குறிப்பாக மேல் மாகாணத்தை சேர்ந்த மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பொது இடங்களில் நடமாட வேண்டும். இயன்ற வரை பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்து கொள்வதே சிறந்த தீர்வாகும். தங்களது உயிரையும் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டுமாயின் உரிய சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அதேவேளை இன்று முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டாலும் சன நெரிசலை கட்டுப்படுத்த வர்த்தகர்கள் உரிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் விளைவுகளை சந்திக்கப்போவது நாம் அனைவருமே என தெரிவித்தார்.
அதேவேளை மாகாணங்களுக்கிடையே அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, நடமாட்டத் தடை அமுலில் இல்லாத காலப்பகுதியிலும் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டிகளுக்கு அமையச் செயற்பட வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.