கோட்டாபய – மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜுலை கிளர்ச்சி ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
இரசாயனப் பசளை தடை, அந்நிய செலாவணி இருப்பு குறைவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பன இதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Advertisement -
அரசாங்கம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டது. அதில், இரசாயன பசளை இறக்குமதியை தடைசெய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல வருடங்களாக இரசாயனப் பசளையை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து விவசாயிகளும் இதனால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த மாதம் இரசாயன உரங்கள் தாங்கிய இரண்டு கப்பல்கள் அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில், எரிபொருள் விலையேற்றமும் இடம்பெற்றிருப்பதால் நாடளாவிய ரீதியில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பலைகள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் அரச உயர்மட்டத்திடம் எடுத்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் இரசாயன பசளை பாவனை தொடர்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின்போது பெரும்பாலானவர்கள் மக்கள் இரசாயனப் பசளைப் பயன்பாட்டிற்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கின்றனர். அதுபோலவே இஸ்ரேல் நாட்டிலும் இரசாயனப் பசளைப் பாவனை அதிகரித்துள்ளது.
இப்படியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவில் திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள இரசாயன பசளைப் பயன்பாட்டு மீதான தடை காரணமாக பல நெருக்கடிகள் எழுந்துள்ளன. எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் உள்ள காரணம், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை மத்திய வங்கியிலுள்ள அந்நிய செலாவணியின் இருப்பு குறைந்திருப்பதேயாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்துவரும் 03 மாதங்களுக்கு மாத்திரமே இறக்குமதிகளுக்கான வெளிநாட்டு இருப்பு காணப்படுவதாக மத்திய வங்கியின் உயரதிகாரிகள் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அடுத்த ஜுலை மாதத்தில் ஸ்ரீலங்காவில் மிகப்பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமையும் ஏற்படலாம் என்றும் அரச உயர்பீடத்திடம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஸ்ரீலங்கா மிகவிரைவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமையை அடையலாம் என்று ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.