நாட்டில் பரவல் தீவிரமாக பரவலடைந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான காலப்பகுதிகளில் சேவை நிலையங்கள் மற்றும் வர்த்தன நிலையங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வாடிக்கையாளர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -

அதற்கமைய 100 பேருக்கான இடவசதிகள் காணப்படும் நிலையமொன்றுக்குள் , 25 பேர் மாத்திரமே அனுமதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதனைவிட அதிகமானவர்கள் அனுமதிக்கப்பட்டால், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் , பணிப்பாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
- Advertisement -

இதேவேளை தாம் இருக்கும் மாகாணத்தை தவிர பிறிதொரு மாகாணத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறு ஏதேனும் ஒரு ஹோட்டலில் வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் அத்தியாவசிய தேவை நிமித்தம் உரிய பிரதேசத்திற்கான சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தங்குவதற்கான அனுமதியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.