வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு ஆதரவாக பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் கொந்தளித்த சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
கடந்த 21 ஆம் திகதி முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.
- Advertisement -
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் என்பன செயலிழந்து காணப்படும் நிலையில் அவசர சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், சிகிச்சைக்காக கடந்த 2 தினங்களாக வைத்தியசாலைக்கு வந்திருந்த நோயாளி ஒருவர் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏமாற்றுத்துடன் வீடு திரும்பியதுடன் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
எனினும் பணிப் பகிஸ்கரிப்பு தொடர்வதனால் ஆத்திரமடைந்த அந்நோயாளி வைத்தியசாலை வளாகத்தில் கொந்தளித்தார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கிளினிக் சேவைகளுக்கு வருபவர்களுக்கு கூட மறு திகதியிட்டு வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரை சந்தித்த போதிலும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுற்றதன் பின்னரே மக்களுக்கு சேவையினை வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.
இன்றுடன் மூன்று தினங்கள் ஆகின்ற நிலையில் போராட்டம் முடியும் வரை , நோயாளர்களை அலட்சியப்படுகின்றதாக தெரிவித்த நோயாளி, இது குறித்து உரிய அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.