இந்தோ- பசுபிக், தென்சீனக் கடல் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கொதிநிலைமை, தலிபான் தீவிரவாதிகளின் மீள் எழுச்சிக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான ஓகஸ்ட் மாதத்துக்குரிய தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
- Advertisement -
இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் திட்டத்திற்கான அமெரிக்க நகர்வுகளின் அடுத்த கட்டத்திற்கான ஒரு முயற்சியாக இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதாக நோக்கலாம். கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு மற்றும் அமைதி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து, ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த மாதம் விவாதிக்க உள்ளது. கடல்சார் பாதுகாப்புத் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, திங்கட்கிழமை ஒன்பதாம் திகதி இணையவழி ஊடாக உரை நிகழ்த்தவுள்ளார்.
- Advertisement -
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழில்நுட்பமும், அமைதி பராமரிப்பும் என்ற தலைப்பில், 18 ஆம் திகதி திகதி பேசவுள்ளார். அதற்கு அடுத்த நாள், தீவிரவாத அமைப்புகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கை குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும் ஜெய்சங்கர் பங்கேப்பார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையை இந்தியா பின்பற்றுவதாகவும் தேசிய அளவில் பயங்கரவாதத் தடுப்புக்கு இந்தியா முன்னுரிமை வழங்குவதாகவும் பயங்கரவாதிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுவது ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவர் எ.எஸ்.திருமூர்த்தி கவலை வெளியிட்டுள்ளார். உலகளவில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் செயற்பாடுகளையே பயங்கரவாதமென திருமூர்த்தி சுட்டிக்காட்டியிருக்கிறார் போலும். சர்வதேசப் பயங்கரவாதம் என்ற பொதுப்படையான கருத்தை மையப்படுத்தியே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை கோரிய போராட்டமும் 2009 ஆம் ஆண்டு இல்லாதொழிக்கப்பட்டது. ஆனாலும் ஈழப்போரைப் பயங்கரவாதம் என்ற பொதுவானதொரு வரைவிலக்கணத்துக்குள் சேர்க்க முடியாதென்ற மனட்சாட்சியின் அடிப்படையில், போரின் இறுதித் தருணத்திலாவது கூடுமென எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த ஐ.நா.பாதுகாப்புச் சபையும் பின்னர் அமைதிகாத்தது.
இந்தியா அதற்குக் காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்களும் இல்லாமலில்லை. ஈழப்போரினால் இந்திரா காந்திகாலத்தில் உருவான அமெரிக்க- இந்திய நெருக்கம், மோடி அரசாங்கத்தில் அமெரிக்காவையே நம்பியிருக்கும் சூழலை டில்லிக்கு உருவாக்கியுள்ளது. இதனை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அமெரிக்க இந்திய ஒப்பந்தங்கள் நிரூபிக்கின்றன.
அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கொழும்புக்கு வந்தபோது உலகப் பயங்கவாதம் பற்றிய எச்சரிக்கையை விடுத்ததுடன், இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்தியிருந்தார்.
அதாவது சீனாவிடம் இலங்கையின் இறைமை சென்றுவிடக்கூடாதென்பதும், அதற்காக ஈழத்தமிழர்களும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசுடன் இணைந்து வாழ வேண்டுமென்ற செய்திதான் மைக் பொம்பியோ அப்போது விடுத்த எச்சரிக்கை. டில்லியில் மோடியைச் சந்தித்த பின்னரும் தமிழர்களுக்கான எச்சரிக்கைத் தொனி அவருடைய குரலில் வெளிப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையில், இந்தியா தலைமையில் இம் மாதம் நடைபெறவுள்ள விவாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் உள்ளிட்ட இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசப்படவுள்ள அதேவேளை, தலிபான்களை ஊக்குவிப்பதாகப் பாகிஸ்தான் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.
தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாகவும் பேசப்படவுள்ளது. இது அனேகமாக இந்தியாவைத் திருப்திப்படுத்தும் அமெரிக்க நகர்வு என்பதில் சந்தேகமேயில்லை. தென் சீனக் கடல் விவகாரம், இந்தோ- பசுபிக் விவகாரம் பற்றிய உரையாடல்களின்போது சீனாவுக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கை அல்லது பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாக சீனாவுடன் சுமூகமாகச் செல்வதற்கான உரையாடல்கள்கூட கொழும்புக்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
இலங்கை ஒற்றையாட்சிக்குள் அடங்கிப்போ என்ற இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கான மிரட்டலாகவும் அதனைக் கருத முடியும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று- கொவிட்ட 19 நோய்த் தாக்கத்துக்குப் பின்னரான இந்தியாவின் பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவுடன் மேலும் நெருங்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இரண்டாவது- டொனாலட் ட்ரமப் நிர்வாகத்தில் மோடி அமெரிக்காவுடன் செய்து கொண்ட மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் ஜோ பைடன் நிர்வாகம் அப்படியே செயற்படுத்துவதால், அமெரிக்காவுடனான பாதுகாப்பு, இராணுவச் செயற்பாடுகளில் இருந்து இந்தியாவால் விலகிச் செல்ல முடியாத கட்டாயச் சூழல்.
இவ்வறான நெருக்கடியின் பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் விவகாரத்தையும் இந்தியா நோக்குகின்றது. அதற்காகவே இலங்கையோடு ஒத்துப்போகும் தன்மைக்கும் இந்தியா படியிறங்கியுள்ளதெனலாம். நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் லெமோ எனப்படும் மூலோபாயப் பரிமாற்ற ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement- LEMOA) 2016 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
இது கணக்கியல் பொறிமுறையாகும். இரு நாடுகளினதும் இராணுவ வசதிகளை ஒருவருக்கொருவர் பரிமாற அனுமதிக்கிறது. உணவு, நீர், போக்குவரத்து, பெட்ரோலியம், எண்ணெய், மசகு எண்ணெய், ஆடை, மருத்துவ சேவைகள், உதிரி பாகங்கள் மற்றும் பாகங்கள், பழுது மற்றும் பராமரிப்பு சேவைகள், பயிற்சி சேவைகள் மற்றும் பிற தளவாட பொருட்கள் மற்றும் சேவைகள் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவின் மற்றுமொரு இராணுவத் தளமாக மாறும் என்ற அச்சமும் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொம்காசா எனப்படும் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் Communications Compatibility and Security Agreement- COMCASA) 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
இது பாதுகாப்பான இராணுவ தகவல் தொடர்புகளைக் கையாள்கிறது. கூட்டுப் பயிற்சிகளின் போது அமெரிக்க, இந்திய அமைப்புகள் இப்போது பாதுகாப்பான மற்றும் மறை குறியாக்கப்பட்ட தொடர்பின் ஊடாக இரு நாட்டுப் படைகளும் பேசிக்கொண்டாலும், இருதரப்புக்குமிடையேயான இடைச்செயற்பாட்டை அதிகரிக்கும்.
அத்துடன் ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற இராணுவத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து அமெரிக்க தயாரிப்புகளுடன் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது. முன்றாவதாக பீகா எனப்படும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Cooperation Agreement- BECA) இது பாதுகாப்புத்துறை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புவிசார்-புலனாய்வு முகமைக்கு இடையிலான ஒப்பந்தமாகும்.
புவிசார்ந்த மற்றும் புவியீர்ப்புத்தரவு, வரைபடங்கள், கடல் மற்றும் வானியல் வரைபடங்கள், வணிக மற்றும் பிற வகைப்படுத்தப்படாத படங்கள் போன்ற அனைத்து வகையான இராணுவ தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளையும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. இந்திய ஏவுகணைகள் மற்றும் அத்தகைய தரவு தேவைப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களின் துல்லியத்தை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் இடமளிக்கிறது. இது குறித்த பேச்சுக்கள் இருநாட்டுப் படை உயர் அதிகாரிக்கிடையே சமீபத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஆகவே இந்த மூன்று ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்தியா அமெரிக்காவின் இராணுவ வியூகத்திற்குள் சென்றுவிட்டதெனக் கருத இடமுண்டு. சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைவிட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கமே அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்து, பொருளாதார உதவிகளையும் அதகளவில் பெற்றிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய இராணுவம் அமெரிக்க தனியுரிம தகவல்தொடர்பு உபகரணங்களான சி-130 ஹெர்குலஸ் சிறப்பு செயல்பாட்டு விமானங்கள் மற்றும் குளோப்மாஸ்டர் சி-17 மூலோபாய ஏர்லிஃப்டர்ஸ் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய முடிந்தது.
ஆனால் ஒப்பந்தத்தின் பின்னரான சூழலில் அமெரிக்க இராணுவத்தின் ஒப்புதலுடனேயே இந்திய ஆயுதக் கொள்வனவு விவகாரங்களும் அமைந்துள்ளன. கடந்தவாரம் இந்தியாவிற்கு 82 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹார்பூன் ஏவுகணைகளை விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான இந்த ஹார்பூன் ஏவுகணைகளை, இந்தியாவிற்கு விற்பது தொடர்பான சான்றிதழை, அமெரிக்கப் பெண்டகனின் இராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு வழங்கி உள்ளது.
அமெரிக்கக் காங்கிரஸிலும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணை விற்பனை மூலம், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு உதவுவதுடன் அமெரிக்கா- இந்தியா இடையிலான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனவும், இந்தோ பசுபிக் மற்றும் தெற்கு ஆசியா பகுதியில், அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமளிக்குமெனவும் அந்தச் சான்றிதழில் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் தெற்குச் சீனக் கடல், மேற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியில் நான்கு முன்னணி போர்க்கப்பல்களை உள்ளடக்கிய கடற்படை பணிக்குழு ஒன்றை இந்திய கடற்படை இந்த மாதம் அமைத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேலாக வியூக ரீதியாகப் பிரதான கடல் பாதைகளின் ஒழுங்கமைப்பு மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேற்குப் பசிபிக் பகுதியில் உள்ள ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் மலபார் பயிற்சியின் அடுத்த பதிப்பில் கப்பல்கள் பங்கேற்குமென இந்தியக் கடற்படைச் செய்தித் தொடர்பாளர் கொமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளார்.
இச் செயற்பாடுகள் தொடர்பாகச் சீனா சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை விழுத்தும் நோக்கில் அமெரிக்காவும் இந்தியாவும் செயற்பாடுவதாகச் சீனா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சிக்குப் பதிலளிக்க ஹைனான் மற்றும் ஜிஷh தீவுகளுக்கு இடையேயுள்ள தென்சீனக் கடலில் சீனா வெள்ளிக்கிழமை இராணுவப் பயிற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பயிற்சி இடம்பெறுமென குளோபல் ரைம்ஸ் செய்தித்தளம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கு ரஷியாவும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஆகவே ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்த மாதம் இடம்பெறவுள்ள விவாதத்துக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ள நிலையில், இந்தோ- பசுபிக். சீனக் கடல், மேற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதிகளில் ஏட்டிக் போட்டியாக இடம்பெறவுள்ள பயிற்சி நடவடிக்கைகள் அமெரிக்க, இந்திய உறவை மேலும் நெருக்கமாக்கும்.
எனவே இலங்கையைத் தங்கள் பக்கம் எடுப்பதற்கு அமெரிக்கா, இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தற்காலிகமாகச் சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி கோட்டாபயவும் வழங்கக்கூடிய சூழல் உண்டு. ஏனெனில் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம் பாரப்படுத்தப்படாமல் தடுக்கப்பட வேண்டுமானால், அமெரிக்க, இந்திய ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமானது.
ஆகவே சீன விரிவாக்கத்தினால் அமெரிக்காவுடன் இந்தியாவுக்குத் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத நெருக்கம், ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானதே. பூகோள அரசியல் சூழல் இந்த நிலமைக்குக் காரணம் என்று சொன்னாலும், அதனைத் தர்க்க ரீதியாக எதிர்கொள்வதற்கான பக்குவம் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் இல்லை.
மேற்படி நலனுக்காக சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்பதிப்படுத்த அமொிக்கவும் இந்தியவும் தயாரிக்கும் நிகழ்ச்சி நிரல்களின் பின்னால், சில புலம்பெயர் அமைப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சில உணர்வாளர்களும் செல்கின்றமை பேராபத்து.