இலங்கை விமானப்படை தயார் நிலையில் இருப்பதாக விமான படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அறிவித்துள்ளார். இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Advertisement -
நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
- Advertisement -
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் (குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள்) மற்றும் ஆற்றுப்படுகைகளுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மலைப்பாங்கான வீதிகளை பயனப்படுத்துவோர், வாகன சாரதிகள் மின்னல், மண்சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், மரங்கள், பாறைகள் விழுதல் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், அவசர உதவிக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோருகிறது.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுதர்சன பத்திரன மேலும் தெரிவிக்கையில், ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
அனர்த்த நிலைமைகள் குறித்து, விமானப்படையின் விமானங்கள் நாட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அனர்த்தங்கள் ஏற்படும் போது, மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்க உலங்குவானூர்திகள், சிறப்பு பயிற்சிப் பெற்ற விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.