ஐரோப்பிய நாடு ஒன்றின் பல்கலைக்கழகத்தின் கிளையை விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் தேசமாணிய எம் டி எஸ் இராமச்சந்திரன் தெரிவித்தார்.
- Advertisement -
நேற்றையதினம் சனிக்கிழமை சிங்கள கற்கையை நிறைய பூர்த்தி செய்த ஆசிரியர் மாணவர்களை வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் மேலதிக பயிற்சி நெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து குறித்த செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
அதற்கான முன்னேற்பாடாக குறித்த பல்கலைக்கழகத்துடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாதியர் கல்வி, பொறியியல் ஹோட்டல் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளைச் சார்ந்த உயர்கல்வி குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கற்பிக்கப்படும்.
இரண்டு வருடங்களைக் கொண்ட உயர் கல்வியானது யாழ்ப்பாணத்திலேயே கற்பிக்கப்பட்டு மேலதிக கல்வியுடன் இணைந்த தொழில் வாய்ப்பு வெளிநாட்டில் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் யாவும் குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
ஏற்கனவே இந்து பௌத்த பேரையினால் இளைஞர் யுவதிகளுக்கு இலவச சிங்கள மற்றும் ஆங்கில வகுப்புகள் இடம் பெறுகின்ற நிலையில் பல்கலைக்கழக உயர் கல்வியை பெற விரும்பும் மாணவர்கள் அடிப்படை ஆங்கில அறிவை எமது நிறுவனத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்