சென்னை தண்டையார் பேட்டை அடுத்த கருணாநிதி நகரில் வசித்து வந்தவர்கள் நந்தகுமார், பபிதா தம்பதி. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 31ம் தேதி மனைவி பபிதா மணலியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
- Advertisement -
மனைவி பபிதா வெளியில் சென்றதைத் தொடர்ந்து நந்தகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி பபிதா மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் என அலங்கோலமாக இருந்துள்ளது.
- Advertisement -
வீட்டின் நிலையை பார்த்து எரிச்சலடைந்த மனைவி, தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, மது போதையில் இருந்த கணவன், தனது மனைவியின் கழுத்தில் சேலையை கொண்டு நெறித்து கட்டிலில் போட்டுவிட்டு மீண்டும் உறங்கச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தைகள் இருவரும் தனது அம்மாவை எழுப்பியுள்ளனர். ஆனால், பபிதா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். அம்மாவின் நிலை குறித்து போதையில் இருந்த நந்தகுமாரிடம் குழந்தைகள் தெரிவித்தனர். உடனடியாக பபிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பபிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பபிதாவின் கழுத்தில் இருந்த தடயங்களைக் கொண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நந்தகுமார் உண்மையை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.