வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் இன்று(03) உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நடைப்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான புணாணை பொத்தனையைச் சேர்ந்த உசனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீடு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் சுவர் மாத்திரம் காணப்பட்ட நிலையில் சீமெந்து கல் சுவர் ஓரத்தில் இருந்து மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் காற்று பலமாக வீசியதன் காரணமாக சுவர் தீடிரென சரிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிழந்துள்ளதுடன், மற்றைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.
உயிரிழந்த மூன்றரை வயதுடைய சிறுமியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.