பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பிய சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் , அதன் இலங்கை பிரதிநிதி மற்றும் மக்கள் வங்கிக்கு மற்றொரு தடை உத்தரவும் கொழும்பு வணிக மேல் நீதிமன்றினால் நேற்று பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது.
- Advertisement -
வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனுவொன்றினை ஆராய்ந்த, கொழும்பு வணிக மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க நீதிமன்ற அறையின் நீதிபதி பிரதீப் ஹெட்டி ஆரச்சி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- Advertisement -
சேதன பசளை இறக்குமதிக்காக குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கக் கூடாது என இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனத்தினால் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு வணிக மேல் நீதிமன்றின் 3 ஆம் இலக்க நீதிமன்ற அறையின் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோவும் இவ்வாறானதொரு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே நேற்று இரண்டாவது தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடைக்கால தடையுத்தரவுகளுக்கு அமைய, சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் அரச வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.
அத்துடன் சீன நிறுவனமோ அதன் உள்நாட்டு முகவரோ கடன் கடிதத்தின் கீழ் எவ்வித கொடுப்பனவையும் பெற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில், வணிக மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.