அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்ததக அதிர்ச்சி தகவலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட ருவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து தனக்கு முன் மண்டியிட வைத்த்தாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் மண்டியிட வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கு, கிழக்கு கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி முட்டுக்காலில் வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்திய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சிங்களக் கட்சிகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள். தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கொரோனாவைத் தாண்டியும் வடக்கும் கிழக்கும் கிளர்ந்தெழும்.
கொரோனாக் காலத்தில் யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்ததும் சர்ச்சையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.